நபிகள் நாயகம் குறித்து பாஜக (முன்னாள்) செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா உள்ளிட்டோர் அவதூறு கருத்துகள் தெரிவித்ததை எதிர்த்து போராட்டம் நடைபெற்றதால், ஜம்முவின் பதேர்வா மற்றும் கிஷ்த்வாரின் சில பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் பதேர்வா மற்றும் கிஷ்த்வார் நகரங்கள் மற்றும் ஸ்ரீநகர் நகரங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பதேர்வா நகரில் ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பதேர்வா நகரில் சிறிய கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சட்டத்தை கையில் எடுக்க கூடாது என காவல்துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.
நள்ளிரவில் மசூதியிலிருந்து வெளியே வந்த இரண்டு பெண்கள், ஊரில் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கடுமையாக தாக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.
இரண்டு பெண்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை கூடுதல் துணை ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் உறுதியளித்ததை அடுத்து பதற்றம் தணிந்தது.
காஷ்மீரில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஸ்ரீநகர் மற்றும் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் பதற்றமான இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வதந்தி பரப்புபவர்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் இணைய வசதியை முடக்கியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோடா, கிஷ்த்வார் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஜம்முவின் காவல் ஆணையர் ரமேஷ் குமார் பிடிஐயிடம் தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில். ஜம்மு-காஷ்மீரில் உள்ள பதர்வா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவி வரும் வகுப்புவாத பதற்றத்தால் இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.
மேலும், பாஜகவின் தில்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.